Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா


மல்லிகைப் பந்தலில் பார்த்துப் பழகிய அவரை
மனை தேடிப் போய்ப் பார்த்தேன்


'டொமினிக் ஜீவா' தமிழ் இலக்கியப் பரப்பில் இல்லந்தோறும் அடிபடும் பெயர். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளி. தேர்ந்த மேடைப் பேச்சாளர். மல்லிகை மாசிகையின் ஆசிரியர். மல்லிகைப் பந்தல் வெளியீட்டாளர். இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு முதன்முதல் பெற்றவர்.

நாலாம் வகுப்புவரையிலான தமிழ் அறிவு கொண்ட எனக்கு சுய வாசிப்புப் பழக்கமே தமிழை வளர்த்துக்கொள்ள இறையருளால் கைகொடுத்தது. நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், கட்டுரைகள், கவிதைகள் என பலதையும் கருத்தூன்றி படிக்கின்ற வழக்கம் அன்று மட்டுமல்ல இன்றும்தான். இதன் ஓர் அங்கம்தான் திரு டொமினிக் ஜீவா அவர்களின் எழுத்துக்கள். 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' எனும் நாமம் தாங்கிய அன்னாரின் சுயசரிதையை வாசிக்கக் கிடைத்ததைத் தொடர்ந்து அவரின் பல நூல்களைப் படிக்கலானேன். அத்தோடு நிறுத்திக்கொள்ளாது அவர் வெளியிட்டுவந்த மாதாந்த இலக்கிய சஞ்சிகையான மல்லிகை இதழ்களையும் அவரின் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளையும் விரும்பி விரும்பி வாசித்தேன். என் தமிழை வளர்த்தெடுத்ததில் திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கும் மல்லிகைப் பந்தலுக்கும் கணிசமான பங்குண்டு.

மல்லிகையின் அந்திம காலம்வரை அதன் சந்தாதாரராகவிருந்த நான் வருடத்துக்கொரு முறை மல்லிகைப் பந்தலுக்குச் சென்று வருவேன். அடுத்த ஆண்டுக்கான மல்லிகைக்கான சந்தாவைச் செலுத்திவிட்டு, மல்லிகைப் பந்தலின் புதிய வெளியீடுகளையும் வாங்கிக்கொள்வேன். நேரம் எடுத்து ஜீவா ஐயாவுடன் உரையாடுவேன். வெட்டிப் பேச்சுக்கள் அல்ல. எல்லாம் இலக்கிய சமாச்சாரங்கள்தான். அவரும் என்னுடன் சளைக்காமல் விருப்பத்துடன் தொடர்ந்து பேசுவார்.

வருடத்துக்கொரு சந்திப்பு, அளவளாவல் என்பதுடன் எமது உறவு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இடையிடையே தொலைபேசியூடாகவும் பேசிக்கொள்வோம். நானும் அழைப்பேன். அவரும் அழைப்பார். இலக்கிய விவகாரங்கள் பேசுவோம். மல்லிகை கிரமமாக கிடைக்கிறதா, ஆக்கங்கள் எப்படி இருக்கின்றன, உங்கள் கருத்துக்கள், அவதானங்கள் யாவை என்ற மூன்றும் தொலைபேசியில் ஜீவா ஐயா தப்பாமல் கேட்கும் கேள்விகள்.

ஏதோ எனக்கும் அவர் மீது ஓர் இனம்புரியாத பிடிப்பு. அவருக்கும் என் மீது ஒரு வகை பிடிப்பு. அவரோடு ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் சமயத்தில் மல்லிகைப் பந்தலுக்கு வருவோர் போவோருக்கெல்லாம் என்னைப் பெரிதாக அறிமுகம்செய்து வைப்பார்.

திரு டொமினிக் ஜீவா அவர்கள் நோய்வாய்ப்பட்ட பின் மல்லிகையும் ஓய்ந்தது, மல்லிகைப் பந்தலும் மறைந்தது. ஏறத்தாழ 49 ஆண்டுகள் வெளிவந்த சரித்திரமும் பெருமையும் மல்லிகைக்கு உண்டு. அது ஜீவா எனும் தனிப்பெரும் ஆளுமையின் கடின உழைப்பு, விடாமுயற்சி, இலட்சிய வேட்கை, இலக்கியப் பற்று முதலியவற்றின் பெறுபேறு என்று சொல்லலாம்.

ஜீவா ஐயா நோயுற்று வீட்டோடு அடங்கிய பின் அவரைப் போய்ப் பார்க்க, குசலம் விசாரிக்க சரியாக சந்தர்ப்பம் அமையவில்லை. சென்ற ஞாயிற்றுக்கிழமை 2019.12.15 அன்று அவரில்லம் ஏகி சுகம் விசாரிக்கக் கிடைத்தது. கொழும்பு காக்கைத் தீவில் மகன் திலீபன் இல்லத்தில் இருக்கிறார். என்னுடன் கூட வந்திருந்த என்னரும் புதல்வர் அவ்வாபைப் பார்த்ததும் 'படி படி' என்று கூறினார். அவரின் கட்டுமஸ்தான தேகத்தைக் காண முடியவில்லை. வீரியம் நிறைந்த பேச்சை செவிமடுக்க முடியவில்லை. ஆனால் மிடுக்கான நடையைக் காணக் கிடைத்தது. அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த எம்மைப் பார்த்து படம் எடுத்துக்கொள்ளலாமே என்றார் திரு மேமன் கவி. அதையும் செய்துகொண்டோம்.

மேற்படி சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்துதவியர் திரு மேமன் கவி அவர்கள். தனது வேலைப் பளுவுக்கிடையில் எனக்காக நேரம் ஒதுக்கி, என்னோடு கூட வந்து திரு டொமினிக் ஜீவா அவர்களைப் பார்த்துவிட்டு பின்னர் காக்கைத் தீவு கடலோரத்தில் சுகமான மாலைப் பொழுதொன்றையும் எம்மோடு கழித்தார். அவரின் அன்புக்கும், உதவிக்கும் நான் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

திரு மேமன் கவி அவர்களின் தொலைபேசி இலக்கத்தை எனக்கு கொடுத்துதவிய இரு பெரியவர்களை இங்கே நான் நினைக்காமலிருக்க முடியாது. திரு ஜவாத் மரைக்கார் மற்றும் திரு பீர் முஹம்மத் ஆகிய இலக்கியவாதிகளுக்கு எந்தன் நன்றிகள்.

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

2019.12.22


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page