Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு


கொரனா நுண்ணங்கி தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து இப்ராஹீம் இப்ன் ஸாலூக்கியஹ் என்பவர் 'அக்பார் அல்-ஸமான்' எனும் தனது நூலில் 365ஆம் பக்கத்தில் கூறியுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவிவருகிறது. இந்தச் செய்தி பற்றி தெளிவு தருமாறு சில சகோதரர்கள் என்னிடம் கேட்டவண்ணமுள்ளனர். அவர்களுக்காகவும் ஏனையோருக்காகவும் இதனை எழுதுகின்றேன்.

மேற்படி செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது:

01. ஹிஜ்ரி 463இல் மரணித்த இப்ராஹீம் இப்ன் ஸாலூக்கியஹ் என்பவர் இந்த விடயத்தைச் சொல்லியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் உலாவரும் குறித்த படத்தில் கூறப்பட்டுள்ளது. இப்ராஹீம் இப்ன் ஸாலூக்கியஹ் எனும் பெயரில் ஓர் எழுத்தாளர் இருந்ததாக வரலாற்றில் காணக்கிடைக்கவில்லை.

02. குறித்த நூலின் 365ஆம் பக்கத்திலிருந்து பெறப்பட்ட தகவலாக அந்த செய்தி சொல்லப்பட்டுள்ளதே தவிர 365ஆம் பக்கம் காட்டப்படவில்லை.

03. குறித்த நூலின் 365ஆம் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த செய்தியில் 'மார்ச் மாதம் ஒரு நிலநடுக்கத்தை எதிர்பாருங்கள்' என வருகிறது. ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ள இப்ராஹீம் இப்ன் ஸாலூக்கியஹ் அக்கால அரபு வழக்கப்படி அதார் என்றுதான் சொல்லியிருப்பாரே தவிர மார்ச் என சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

04. குறித்த நூலின் 365ஆம் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த செய்தியின் அரபு உரைமூலம் தரமான அரபு நடையிலல்லாமல் தளர்ச்சியுடன் காணப்படுகிறது.

05. 'அக்பார் அல்-ஸமான்' எனும் பெயரில் ஒரு நூல் இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. அதனை எழுதியவர் பிரபல வரலாற்றாசிரியர் அல்-மஸ்ஊதி அவர்கள். இந்த நூலின் முழுப் பெயர் 'அக்பார் அல்-ஸமான் வமன் அபாதஹ் அல்-ஹித்ஸான் வஅஜாஇப் அல்-புல்தான் வல்-காமிர் பில்-மாஃ வல்-உம்ரான்' என்பதாகும். சுமார் ஆறாயிரம் பக்கங்கள் கொண்டு பல பாகங்களில் அமைந்திருக்கலாம் என இந்நூல் பற்றி நம்பப்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக இந்த நூலின் ஒரு பாகம் மட்டுமே எஞ்சியிருக்க ஏனைய பாகங்கள் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. ஆகவே 'அக்பார் அல்-ஸமான்' எனும் நூலில் 365ஆம் பக்கத்தில் இப்ராஹீம் இப்ன் ஸாலூக்கியஹ் என்பவர் கூறியுள்ளதாக உலாவரும் தகவல் நம்பத் தகுந்ததாக இல்லை.

அல்லாஹ் தஆலாவே அனைத்தும் அறிந்தவன்.

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.08.04
2020.03.29


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page