Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

பசி வந்தால் பத்தும் பறக்கும்


ஏனோ தெரியவில்லை. எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம்களையே குறைகூறுகிறார்கள். ஊரடங்கு சட்டத்தை மீறுவோரும் முஸ்லிம்கள்தான். Lockdownஐ உடைப்போரும் முஸ்லிம்கள்தான். Coronavirus பரப்புவோரும் முஸ்லிம்கள்தான். Quarantineஐ மதிக்காதோரும் முஸ்லிம்கள்தான். இப்படி அடுத்தவர் சிலர்தானே சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். விட்டுவிடுவோம் என பார்த்தால் நம் சமூகத்து மதியுரைஞர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. வானொலியில் வந்து எச்சரிக்கிறார்கள். தொலைக்காட்சியில் வந்து எச்சரிக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் வந்து எச்சரிக்கிறார்கள். ஓரிருவர் செய்கிற தவறுக்கு முழு முஸ்லிம்களும் அப்படித்தான் என அடித்துவிடுகிறார்கள். ஏதோ இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டும்தான் சட்டத்தை மீறுகிற மாதிரி கதைக்கிறார்கள்.

முஸ்லிம்கள் முன்மாதிரியாக வாழ வேண்டும். உண்மைதான். அதற்காக தவறே செய்யாமல் இருப்பார்களா? படித்தவர்கள், பண்பாளர்கள், தலைவர்கள் ஏன் முத்திப் பழுத்த மதியுரைஞர்களே தவறு செய்கிறார்களே. புத்தி சொல்லுங்கள். யாரும் வேண்டாமென சொல்லவில்லை. அதற்காக எல்லா தவறுகளும் முஸ்லிம்களால்தான் நடக்குதென சொல்லாதீர்கள்.

கொரனா நுண்ணங்கியால் எல்லா இலங்கையர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் கொரனா நுண்ணங்கியாலும் பாதிக்கப்பட்டு இனவாத நுண்ணங்கியாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உங்கள் மதியுரையால் எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்க்காதீர்கள்.

இவ்வளவு நெருக்கடியான நிலையிலும்கூட இனவாதம் போஷிக்கப்படுகிறதே. இது வேண்டாமென அவர்களுக்கு புரிகிற பாஷையில் கொஞ்சமாவது சொல்லுங்கள். மதியுரைஞர்களே!

வீட்டில் அடுப்பெரிய வழியில்லாமல் விழிபிதுங்கி நிற்கிறார் பல பேர். கையில் காசு இல்லாமல் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து நிற்கிறார் பல பேர். பல நாட்கள் அடைபட்டு பணத்துக்கு முடைப்பட்டு நிற்கிறார் பல பேர். நலிவுற்று நாதியற்று நிற்கிறார் பல பேர். மதியுரைஞர்கள் நிலைமையை புரிந்து மதியுரை வழங்குங்கள். மரத்திலிருந்து விழுந்து கிடக்கின்றனர் மக்கள். அவர்களை மாடேறி மிதிக்கிற மாதிரி மதியுரை வழங்காதீர்கள்.

பசி வந்தால் பத்தும் பறக்கும்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். – ஔவையார்.

ஹனிபா அப்துல் நாஸர்

2020.04.09


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page