Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : உண்மையான உலக அழிவு


ஆசிரியர் : எம்.ஐ.எம். அப்துல் லத்தீப்

ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத் தலைவர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்கள் பெருமனதுடன் அளித்த அணிந்துரை


எல்லாம் வல்லவன், ஏக இறைவன் அல்லாஹ் தஆலாவைப் புகழ்கிறேன். அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்றும் எம் இதயக் கமலங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்து வாழ்பவர் முத்தான முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அன்னாரின் சங்கைமிகு குடும்பத்தவர்கள், அன்புக்கினியத் தோழர்கள், அவர்களின் உன்னத வழியைத் தொடர்வோர், அதற்காக அழைப்போர், உழைப்போர் யாவர் மீதும் சலாத்தும் ஸலாமும் சொல்கிறேன்.

பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தா அல்லாஹ் தஆலா அதனைப் படைத்தது போல ஒரு நாள் அதனை முடிவுக்குக் கொண்டுவருவான். இது இறுதி நாள், யுக முடிவு தினம் என அழைக்கப்படுகிறது.

இறுதி நாள் பற்றிய நம்பிக்கை இஸ்லாமிய அக்கீதாவில் ஒரு நீண்ட, அகன்ற, ஆழமான, பெரிய பாடமாகும். நூற்றுக்கணக்கான குர்ஆனிய வசனங்கள், நூற்றுக்கணக்கான நபி மொழிகள் உள்ளடங்கிய, எண்ணிறந்த சஹாபிகள், இமாம்களின் விளக்கங்கள் பொதிந்த பென்னம் பெரிய பரப்பு அது.

யுக முடிவு நாளை விசுவாசிப்பது ஈமானின் அடிப்படை அம்சங்களுள் ஒன்று. உலக முடிவு நாளை விசுவாசிக்காதவன் முஃமினல்ல. இது சந்தேகத்துக்கு, விவாதத்துக்கு அப்பாற்பட்டது.

பிரபஞ்சம் அழிக்கப்படும் தினம் இதுதான் என மனிதர்களுக்கு துல்லியமாக சொல்லிவைக்கவில்லை புனித மார்க்கம் இஸ்லாம். எனினும் அதன் அடையாளங்களை சொல்லிவைத்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அடையாளங்களில் சில நிகழ்ந்து முடிந்துவிட்டன. வேறு சில நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இன்னும் பல நிகழ வேண்டியுள்ளன. எப்படியோ இறுதித் தினம் சம்பவிக்க முன் அனைத்து அடையாளங்களும் நிகழ்ந்து நிறைவுற்றாகும். இதுவே தொன்றுதொட்டு முஸ்லிம்களின் அசைக்க முடியாத, ஆட்ட முடியாத, வலுவான நம்பிக்கையாகும். இறுதி வரையும் முஸ்லிம் மக்கள் இந்த திடமான விசுவாசத்துடன்தான் வாழ்வர்.

உலக முடிவு தினம், அதன் அடையாளங்கள் பற்றி பல்லாயிரம் பல்லாயிரம் நூல்கள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் வித்தியாசம் வித்தியாசமான பரிமாணங்களுடன் எழுதப்பட்டுள்ள இந்நூல்கள் அளவிற் சிறியவையாகவும் பெரியவையாகவும் நடுத்தரமானவையாகவுமுள்ளன. பொதுத் தேவையைக் கருத்திற் கொண்டு யாக்கப்பட்டவை, சிறப்புத் தேவையைக் கருத்திற் கொண்டு யாக்கப்பட்டவை என இதன் பரிமாணங்கள் அகன்று விரிகின்றன.

வாசகர் கரத்தில் தவழும் இந்த நூல் ஒரு விசேட தேவையைக் கவனத்திற் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. 2012 டிசம்பர் 21ஆந் திகதியுடன் உலகம் அழிந்துபோகிறது என மாயன் கலண்டரை வைத்துக்கொண்டு குவலயம் முழுவதையும் குழப்பிவிட்ட கண்றாவி அண்மையில் நடைபெற்றதல்லவா. அதற்கு தெளிவு கொடுக்கும் நோக்கில் தொகுக்கப்பட்ட படைப்பே இது.

'உண்மையான உலக அழிவு' எனும் நாமம் தாங்கிய இந்நூலை தொகுத்துள்ளவர் ஆசிரியர் எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் அவர்கள். யுக முடிவு பற்றி அல்-குர்ஆனிய வசனங்களையும் மேலும் ஹதீஸ்களையும் தன்னால் முடிந்தளவு திரட்டி இத்தொகுப்பை ஆக்கியுள்ளார். உண்மையில் படித்து பயன் பெற வேண்டிய ஒரு நன்னூல்.

ஆசிரியர் எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் வேறு படைப்பிலக்கியங்களும் உள்ளன. அன்னாரின் எழுத்துக்கள் மூலம் தமிழுலகில் அறிமுகமானவர். எழுத்தாக்கப் பணியில் தொடர்ந்து ஊக்கத்தோடு ஈடுபட்டுள்ளார். உடல் நலக் குறைவுடனும் எழுதுவதற்கு முழுக்குப்போட்டுவிடாது எழுத்தை தொய்வின்றி தொடரும் ஆசிரியர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த திரட்டும் அவரின் இந்த நிலையிலேயே வெளிவருகிறது.

சுகக் குறைவுடன் சும்மா இருக்காமல் எழுதி சுகம் காணும் சுதந்திர புருஷர் ஆசிரியர் எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் இன்னுமின்னும் எழுத, அவரின் படைப்புக்கள் மூலம் மானிடர் பயன் எய்த, இந்த தொகுப்பு அதன் நோக்கத்தை எட்ட, தொகுப்பாசிரியருக்கு நற்சுகம், நீண்ட ஆயுள் கிட்ட, அவர் ஈருலக சௌபாக்கியங்கள் நிரப்பமாகப் பெற எவனின்றி எதுவுமில்லையோ அந்த ஏகனை இறைஞ்சுகின்றேன்.


எச். அப்துல் நாஸர்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.
ஸ்ரீ லங்கா.

1434.06.19
2013.04.30
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page