Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : இஸ்லாம் வலியுறுத்தும் ஹிஜாப்


ஆசிரியர் : மவ்லவி எஸ்.இஹ்ஸான்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தேசிய பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர்
இந்நூலுக்கு மனமுவந்தளித்த சிறப்புரை


பரந்து விரிந்த இஸ்லாமிய ஷரீஆ மனிதகுலத்தின் நிம்மதி மிக்க நல்வாழ்விற்கு வழிகாட்டி நிற்கின்றது. அதன் மகத்தான போதனைகள் வெறும் சட்டங்களை மாத்திரம் மையப்படுத்தாது மனித விழுமியங்களையும் மையப்படுத்துகின்றன. தனி மனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு அனைத்திலும் மனித விழுமியங்கள் பேணப்படுவதில் இஸ்லாம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. முன்னேற்றத்தை நோக்கிய ஆரோக்கியமான சமூக நகர்வும் மனித விழுமியங்களைப் பேணுவதிலேயே தங்கியுள்ளது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான சட்டதிட்டங்களை அறிமுகம் செய்த இஸ்லாம், சில வேளைகளில் இரு பாலாருக்கும் வெவ்வேறான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்தி ஒழுக்க விழுமியங்களை சமூக தளத்தில் ஆழமாக வேறூன்றச் செய்ய முயல்கின்றது. மனிதனின் அசைவு, நகர்வு, உடை, நடை அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றதும், விழுமிய ஒழுக்க மாண்புகளுடன் கூடியதுமான தூய இஸ்லாமிய போதனைகள் புறத்தொதுக்கப்பட்டமையே மானிட சமூகத்தின் இன்றைய சீரழிவுக்கும், பின்னடைவுக்கும் முதற் காரணமாகும்.

இஸ்லாம் மனிதனை முழு மனிதனாக காண விரும்புகின்றது. தான் அழகுற சிருஷ்டித்த மனிதனை ஆடைகளை அணியுமாறு பணித்து அவனை முழுமைப்படுத்த அல்லாஹ் ஆசைப்படுகின்றான். அதி உன்னத இஸ்லாமிய உடைக் கோட்பாடு இவ்வுண்மையை பறைசாற்றி நிற்கின்றது. ஆடையில்லா மனிதன் அரை மனிதனாவான்.

ஆள் பாதி ஆடை பாதி என்ற அநாகரிக நிலைக்கு வந்து விட்ட சமகால மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் நம் நாட்டு மக்களையும் வெகுவாக பாதித்திருக்கின்றது. கட்டுக்கோப்பான முஸ்லிம் சமூகமும் இத்தாக்கத்திலிருந்து தப்பவில்லை. இந்நிலையில் தான் சமூகத்தின் கலங்கரை விளக்கங்களான ஆலிம்கள் இது பற்றி அதிகம் பேசவும், எழுதவும் தலைப்பட்டுள்ளனர்.

ஒரு சுதந்திரப் பெண் முழுமையாக தன் உடலை மறைத்தல் வேண்டும் என வலியுறுத்தி இந்நூலை யாத்திருக்கின்றார் மவ்லவி எஸ்.இஹ்ஸான் அவர்கள். பெண் ஆடைத் தொடர்பில் புனித அல்-குர்ஆன் வசனங்களையும், துhய ஹதீஸ்களையும் முன்வைத்து, அவற்றுக்கான கண்ணியமிக்க இமாம்களின் விளக்கவுரைகளையும் சமர்ப்பித்து மக்கள் கரங்களில் தவழ விட இவ்வாலிப ஆலிம் மேற்கொண்டுள்ள முயற்சி மெச்சத்தக்கது. கொழும்பு மத்ரசதுர் ரஷாதில் கற்றுத் தேரி அக்கல்லூரியிலேயே போதனாசிரியராக கடமையாற்றும் மவ்லவி எஸ்.இஹ்ஸான் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட தகுதியும், திறமையும் உள்ளவர்.

இந்நூலின் கையெழுத்துப் பிரதியை படித்து விட்டு சில திருத்தங்களை செய்யுமாறு நூலாசிரியரை கேட்டுக்கொண்டேன். அத்திருத்தங்களுடன் இப்படைப்பு மக்கள் கரம் கிட்டுமாயின் அல்லாஹ்வின் அருளால் நிச்சயம் அவர்கள் பயன் அடைவர்.

மக்கள் மன்றத்தில் இந்நூல் அதீத பயனளிக்கவும், அதன் ஆசிரியரின் இன்னும் பல படைப்புக்கள் மனித குல மேம்பாட்டுக்காய் வெளிவரவும் எனது துஆக்கள்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
மன்னார் வீதி,
புத்தளம்.

2004.03.15
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page