Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

பதுளை பஹ்மிய்யஹ் அரபுக் கல்லூரி ஐந்தாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2009


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் செய்தி


குறிஞ்சி நிலத்தில் குளுகுளுவென ரம்மியமாய் வீசும் தென்றல் மேனிகளில் ஸ்பரிசிக்க பச்சைக் கம்பளங்கள் விரித்தாற் போல் காட்சியளிக்கும் விரிந்து பரந்த தேயிலைத் தோட்டங்கள் நடுவே எழில் கொஞ்சும், இயற்கை வளமிகு நகர் பதுளை மண்ணில் தூய ஷரீஅத்தின் உயர் அறிவுத் துறைகளை போதிக்கவென எழுந்து வந்த பஹ்மிய்யஹ் அரபுக் கல்லூரி இரு தசாப்தங்கள் தாண்டி வெற்றிப் பாதையில் வீறு நடை போட்ட நிலையில் ஐந்தாவது பட்டமளிப்பு விழாக் காணுகின்றது. ‘அல்-ஹம்து லில்லாஹ்’. இக்கலாபீடம் இதுகாறும் கடந்து வந்த வரலாற்றை எழுத்தாக்கி, அதன் சமகால நிலை பற்றிக் குறிப்பிட்டு, வருங்கால திட்டங்கள் குறித்து பேசுகின்ற ஆவணமொன்றாக இச்சந்தர்ப்பத்தில் வெளியிடப்படும் நினைவு மலரில் நானும் எழுதுகோல் பிடிக்க வேண்டப்பட்டமை உள்ளத்தில் உவகையை ஏற்படுத்துகின்றது.

ஈழத் திருநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஷரீஆ அரபுக் கலாசாலைகள் தோன்றிக் கொண்டிருந்த 1980களில் ஊவா மாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்ட கண்ணி ஷரீஆ அறிவுக்கூடம் பஹ்மிய்யஹ் எல்லோர் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து நிலைத்து நிற்கும் கல்வி நிலையமாகும். பதுளை என்றதும் நம் நினைவுக்கு வருவது பஹ்மிய்யஹ்தான் என்றால் அது மிகைப்பட்ட கூற்றாகாது.

தீவின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஷரீஆ கல்விக்கூடங்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அதிகரித்தவண்ணம் உள்ளமை இந்நாட்களில் ஷரீஆக் கல்வியைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள அதீத ஆர்வத்தை, பரவலான கரிசனையை சுட்டப் போதுமானது. வார்த்தைக்கு வார்த்தை வித்தியாசம் வித்தியாசமான சொற்றொடர்கள், வசனங்கள் மூலம் அரபுக் கல்லூரிகளின் நோக்கம் எழுதப்பட்ட போதிலும் ஏக இலக்கை நோக்கிய ஓர் இலட்சியப் பயணத்தை அவை செய்துவருகின்றன என்பதே உண்மை.

அரபு, ஷரீஆத் துறைகளை கசடறக் கற்ற வல்லவர்களை, உயர்ந்த பண்புகள், சிறந்த நடத்தை கொண்ட நல்லவர்களை வெளிக்கொணர வேண்டிய இமாலயப் பொறுப்பொன்றை சுமந்த நிலையில் இக்கலாசாலைகள் தொழிற்பட்டு வருகின்றன. தமது பட்டதாரிகளை வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் சமூகத்துக்கு சமர்ப்பிக்கும்போதே இக்கலாநிலையங்களின் குறிக்கோள் நிறைவேறுகிறது.

வஹ்ய் சார்ந்த பல்வேறு அறிவுத் துறைகளை வலுவாகக் கற்றுத் தேர்ந்த, சத்திய சன்மார்க்கத்தை சமூகத்தின் அங்கங்களுக்கு சரிவரச் சொல்லி புரியவைக்கும் பயிற்சியளிக்கப்பட்ட, ஈழத்து மொழிகளில் போதனைகள் செய்யும் திறமை வளர்க்கப்பட்ட, எதைப் பற்றிப் பேசினாலும் அடுக்கடுக்காக ஆதாரங்களை முன்வைத்து ஆணித்தரமாக பேசுகின்ற, நானிலத்தின் நாளாந்த நடப்புகள் பற்றி அவ்வப்போது தம்மை புதுப்பித்துக்கொள்கின்ற, கல்விக் கேள்விகளில் இடையறாது ஈடுபடுகின்ற, எதனையும் ஆய்வுக் கண் கொண்டு பார்க்கின்ற, காலதேசவர்த்தமானத்தைக் கவனத்தில் கொண்டு காரியமாற்றுகின்ற, தூரநோக்கும் சமூக பிரக்ஞையும் இதய சுத்தியும் உன்னத பண்பாடும் நிறையப் பெற்ற ஆலிம்களே இன்றைய காலத்தின் தேவை. சமூகம் இதனைத்தான் இக்கல்லூரிகளிலிருந்து பெரிதும் அவாவி நிற்கிறது.

பஹ்மிய்யஹ்வை நினைக்கையில் அதன் முதல் அதிபர் மர்ஹூம் அஷ்-ஷைக் எம்.எச்.கே. சர்தார்கான் ஹழ்ரத் அவர்களை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. இவ்வரிகளை எழுதும் வேளை அவர் என் மனத் திரையில் வந்து போகின்றார். அறிவில், ஆற்றலில், அனுபவத்தில், வயதிலென எல்லா வகைகளிலும் என்னைவிட மூத்த அவருடன் எவ்வளவுதான் மரியாதை கலந்த பயத்துடன் நான் உறவாடிய போதிலும் மிக மிக நெருக்கமாக என்னுடன் உறவு வைத்த பெருந்தகை. பஹ்மிய்யஹ்வின் இன்றைய வளர்ச்சியை, உயர்ச்சியை காணும் நிலையில் அவர் இன்று உயிருடனிருந்தால் எல்லோரைவிடவும் அதிக பூரிப்பும், ஆத்ம திருப்தியும் அடைபவர் அவராகத்தான் இருப்பார் என்பது இவ்வடியேனின் முடிபு. வல்லவன் அல்லாஹ் அவரின் மண்ணறை, மறுமை வாழ்வை சிறப்பாக்கி, மனமாக்கி, ஒளிமயமாக்கி வைப்பானாக!

தற்போதைய அதிபர் அஷ்-ஷைக் எச்.எம்.எம். ஹிதாயத்துல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் காலத்தில் பஹ்மிய்யஹ் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதை மனம் திறத்து, வாய் திறந்து பாராட்டித்தான் ஆக வேண்டும். காணும்போதெல்லாம், தொடர்புகொள்ளும்போதெல்லாம் பஹ்மிய்யஹ் பற்றியே நிறைய பேசுவார். இயல்பாகவே சுறுசுறுப்பானவர் அஷ்-ஷைக் எச்.எம்.எம். ஹிதாயத்துல்லாஹ் ஹழ்ரத். பதின்மப் பருவ முதல் எனது நெருங்கிய நண்பர், ஆத்மார்த்தமாக பழகுபவர். அன்று அவரிடம் கண்ட உற்சாகம், சுறுசுறுப்பு, மென்மை, நெகிழ்வுத் தன்மை, எளிமை, வெளிப்படைத் தன்மை, நன்றியறிதல், ஹாஸ்யம் இன்றும் அவரிடத்தில் அப்படியே இருக்க காண்கின்றேன்.

1985இல் நட்டப்பட்ட பஹ்மிய்யஹ் எனும் விதை வெடித்து பூமியை கிழித்துக்கொண்டு வெளிவந்து நாற்றாக, மரமாக உருப்பெற்று பூத்து, காய்த்து ஆலிம்கள், ஹாஃபில்கள் கனித் தொகுதிகளை தருகின்ற எல்லா தருணங்களும் அனைவர் நெஞ்சங்களையும் களிப்புறச் செய்யும் தருணங்கள்தான். விதை கொடுத்தவர்கள், அதனை நட்டியவர்கள், நீர் ஊற்றியவர்கள், உரம் இட்டவர்கள், வேலி கட்டியவர்கள், கிருமிநாசினி தெளித்தவர்கள் தாம் கஷ்டப்பட்டு மிகுந்த பிரயாசத்துடன் பராமரித்து கண்ணென பாதுகாத்து வளர்த்த விருட்சம் பழம் கொடுப்பதை பார்க்கும்போது நிச்சயம் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றிடுவர். அவர் தம் இதயங்களில் பொங்கிப் பிரவகிக்கும் சந்தோஷத்தையும், ஆத்ம திருப்தியையும் முழுமையாக வர்ணிக்க வார்த்தைகளால் முடியாது.

பஹ்மிய்யஹ்வின் சீரான பொது நிர்வாகத்தை உறுதி செய்கின்ற நிருவாக சபையினர், கட்டுப்பாடான, கச்சிதமான, நேர்த்தியான உள் நிருவாகத்தை உத்தரவாதமளிக்கின்ற அதிபர், ஆசிரியர்கள், பக்கபலமாக நின்றுதவுகின்ற ஊழியர்கள், சிறிதோ, பெரிதோ தமது கஜானாக்களிலிருந்து அள்ளி அள்ளி கொடுக்கின்ற பரோபகாரிகள் இம்மகிழ்ச்சியான கட்டத்தில் நன்றிப் பெருக்குடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அனைவரினதும் பாராட்டுக்கும் பிரார்த்தனைக்கும் உரித்தானவர்கள்.

நன்கு திட்டமிடப்பட்ட கல்வி முறையுடன், சீரிய ஒழுக்கத்துடன், சிறப்பான நிர்வாகத்துடன் பஹ்மிய்யஹ் அரபுக் கலாசாலை ஒய்யாரமாக இறுதி நாள் வரை நீடித்து, நிலைத்து கல்வியை ஆயுதமாக, குணத்தை அணிகலனாக, இறையச்சத்தை ஆடையாக, தஃவாவை கடமையாக, இதய சுத்தியை கிரீடமாகக் கொண்ட பல்லாயிரம் ஆலிம்களையும், ஹாஃபில்களையும் அகிலத்துக்கு அளிக்க வேண்டுமென்பதே அடியேனின் அவாவும் துஆவும்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

2009.02.07
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page