Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1427 கி.பி. 2006


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின்
ஈத் அல்-பித்ர் வாழ்த்துச் செய்தி


மற்றுமொரு ரமழான் எம்மிடம் விடைபெற்றுக் கொள்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்காக வேண்டி மனித உணர்ச்சிகளை தியாகம் செய்யும், சமூகத்திற்காக சுயநலத்தைத் தியாகம் செய்யும், சக மனிதருக்காக தனது பேராசையைத் தியாகம் செய்யும் இறை செய்தியை எமக்கென விட்டு விட்டு விடைபெறுகிறது. ஆண்டுக்குப் பின் ஆண்டு அது விட்டுச் செல்லும் செய்தி அதுதான். அந்த செய்தி தன் படைப்பினத்தால் கடைப்பிடித்தொழுகப்பட வேண்டும் என்பது படைப்பாளியின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த ஒரு மாத காலமாக நாம் பகற்போதில் தவிர்த்துக்கொண்டிருந்த உணவு உள்ளிட்ட இதர தேவைகளை அனுபவிக்கும் நாளிதுவாகும். அது போலவே இக்காலப் பகுதியில் நாம் எவற்றைக் கற்றோமோ அவற்றை செயலிற் காட்டும் நேரமாகவும் அமைகிறது. நாம் கற்ற அவை சகிப்புத் தன்மை, பரஸ்பர புரிந்துணர்வு, பரோபகாரம் முதலானவையாகும்.

மூதூரிலும், தோப்பூரிலும் இன்னும் இந்நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள அகதி முகாம்களிலும் சொல்லொனா துன்பத்தை அனுபவித்துவரும் குறிப்பிடத்தக்க பெருந்தொகையான மக்கள் இந்நாளில் நன்கு உண்டு, நன்கு உடுத்தியிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஈகைக் கரங்களை நீட்ட வேண்டிய தருணமாகவும் இது அமைகிறது. சந்தேகத்துக்கிடமின்றி இக்கைங்கரியம் முஸ்லிம் சகோதர, சகோதரிகளால் செய்யப்பட்டு வருகிறது என்பது உண்மையாகும். ஆயினும் அது இடையூறின்றித் தொடர வேண்டும். பட்டினி, பஞ்சத்துக்கெதிரான இஸ்லாம் காட்டித்தரும் யுத்தமாகவும் அது அமைகிறது. இத்தினத்திலே தன் ஏழைச் சகோதரன் மஸ்ஜிதுக்குச் செல்லும் பொழுது பட்டினி வயிற்றோடு பழைய ஆடையில் செல்லாதிருக்க உணவு, உடை வழங்க வேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு.

முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த பெருநாள் நல் வாழ்த்துக்களை என் சார்பிலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பிலும் தெரிவித்துக் கொள்ளும் வேளை ரமழான் காலத்தில் மேற்கொண்ட பேருபகாரத்தை ரமழானுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் அதற்கப்பாலும் தொடருமாறு விநயமாகக் கோருகிறேன்.

கருணையாளன் அல்லாஹ்வின் அருள் நம் அனைவர் மீதும் உண்டாவதாக!

ஈத் முபாரக்!


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2006.10.17

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page