Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Condolences

மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் சாதுவான கல்விமான்


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


பல்வேறு சமய, சமூகப் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டக் கிளைத் தலைவர் மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் இறையடி சேர்ந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைந்தேன். இவ்வாறு ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத் தலைவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளருமான அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

நல்லறிவு புஷ்பமாக புஷ்பித்து, முன்மாதிரியான நல்ல பல தொண்டுகளை முஸ்லிம் சமூகத்துக்கு ஆற்றிவிட்டு 2009.12.25 வௌ;ளிக்கிழமை அன்று அல்லாஹ்வின் பக்கம் திரும்பிக்கொண்ட மவ்லவி ஜஃபர் என்றும் மக்கள் இதயங்களில் வாழ்பவர். மென்மை, அமைதி, அடக்கம், பணிவு, எளிமை போன்ற அதி உயர் பண்புகளுடன் மிளிர்ந்த அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டக் கிளையின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர்.

அரபு ஆசிரியராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக, அரபு மொழி பிரதிப் பணிப்பாளராக அரச சேவையில் முத்திரை பதித்த இப்பெருமகன் வெலிகம பாரி அரபுக் கல்லூரி, தர்கா நகர் முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி, ஹெம்மாதகம ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி ஆகியவற்றில் அதிபர் பதவியை அலங்கரித்தவர். மாவனல்லை மஸ்ஜிதுல் ஹுதாவின் நிருவாக சபை உறுப்பினராக தொண்டு புரிந்தவர். ஒரு காலை வரக்காபொல பிரதேசக் காதியாக சேவையாற்றிய பின் காதிச் சபை அங்கத்தவராக தேசிய மட்டத்தில் நியமிக்கப்பட்டார்.

வெலிகம பாரி அரபுக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்து இஸ்லாமிய ஷரீஆவின் ஞானப் பெருக்குடன் அமைதியாய் வாழ்ந்த கணவான் மவ்லவி ஜஃபர் அவர்களின் சொல், செயல், நடவடிக்கை யாவுமே மென்மையானவை. ஏன் அவரின் மேனி கூட மென்மையானது தான். அவருடன் முசாபஹா (கைலாகு) செய்யும் எவரும் அவரின் உள்ளங்கை மென்மையை உணரக்கூடியதாக இருந்தது. நடந்தால் பூமிக்குக்கூட பாரமில்லாதவர். ஒரு சாதுவான கல்விமானாகவே இறுதி மூச்சு வரை வாழ்ந்தார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்ததை முன்னிட்டு கௌரவ ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோரை முஸ்லிம் சமூகம் சார்பாக வாழ்த்திப் பாராட்டும் பொருட்டு அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்துக்கு சிரமம் பாராது வருகை தந்திருந்த மவ்லவி ஜஃபரை வைபவ முடிவின் பின் கொல்லுப்பிட்டி மஸ்ஜிதில் வைத்து சந்தித்தேன். பாதரட்சை அணிவதில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அன்னாருக்கு பணிந்து, குனிந்து, குந்தியிருந்து பாதரட்சை அணிவித்து விட்டேன். நற்குண சீலரான நரைத்த ஓர் ஆலிம் பெருந்தகைக்கு காலணி அணிவதில் உதவக் கிடைத்ததை உண்மையில் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். அதுவே அவரை நான் சந்திக்கும் இறுதி சந்தர்ப்பமாகவும் வல்ல அல்லாஹ் எழுதி விட்டான் போலும்.

பன்முகப்பட்ட சமய, சமூகத் தொண்டரான இம்மகானின் மறைவு உண்மையில் ஒரு பெரும் இழப்பு தான். சமூகம் அவருக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளது.

அன்னாரின் மறு உலக வாழ்வு சிறக்க, மணக்கப் பிரார்த்திப்பதோடு, அவரது மனைவி, பிள்ளைகளுக்கும், ஏனைய உற்றார் உறவினர்களுக்கும் கனத்த உள்ளத்துடன், பனிக்கும் கண்களுடன் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்.

2009.12.26


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page